search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சத்துணவு மையங்கள்"

    தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் சத்துணவு திட்டத்திற்கான நிதியை மத்திய அரசு குறைத்துள்ளதற்கு திருநாவுக்கரசர் கண்டனம் தெரிவித்துள்ளார். #Congress #Thirunavukkarasar #NutritionCenter

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    காமராஜரால்1955ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற ஆசிரியர்கள் மாநாட்டில் அறிவிக்கப்பட்டு, 1956 ம் ஆண்டு முதல் அரசு தொடக்க பள்ளியில் படித்த குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

    இத்திட்டம் 1982ம் ஆண்டு அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆரால் சத்துணவு திட்டமாக விரிவுபடுத்தப்பட்டது. இத்திட்டத்தால் இன்று 43 ஆயிரத்து 203 சத்துணவு மையங்களும், சத்துணவு அமைப்பாளர்கள், சமையல் உதவியாளர்கள் என 90 ஆயிரம் பேர் பணியாற்றி, நாள்தோறும் 52 லட்சம் பள்ளிக் குழந்தைகள் சத்துணவு சாப்பிட்டு வருகின்றனர்.

    தமிழக அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வந்த இத்திட்டத்திற்கு 1995 ம் ஆண்டு முதல் மத்திய காங்கிரஸ் அரசு மானியம் வழங்கியது. 60 சதவீதம் மத்திய அரசு நிதியும், மாநிலஅரசு 40 சதவீத நிதியும் ஒதுக்கி இத்திட்டம் செயல்பட்டு வந்த நிலையில் தொடர்ந்து தமிழக மக்களை புறக்கணிக்கின்ற மத்திய பா.ஜக. மோடி அரசு இதுவரை அளித்து வந்த 60 சதவீத நிதியை 40 சதவிதமாக குறைத்துள்ளது பெரும் கண்டனத்திற்குரியது.

    மத்திய அரசு நிதி குறைத்துள்ளது எனும் காரணம் காட்டி 8 ஆயிரம் சத்துணவு மையங்களை மூட தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. ஏழை எளிய மாணவர்களின் நலனில் இந்த அரசு அக்கறை காட்டாத அரசாக செயல்படுகிறது என்பதையும், 8000 சத்துணவு மையங்களை மூடுவதால், 24000 சத்துணவு ஊழியர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதையும் கருத்தில் கொள்ளாத மாநில அ.தி.மு.க. அரசு, இத்திட்டத்திற்கு மத்திய அரசிடம் நிதி கோர உரிய அழுத்தத்தை காட்டாமல், மாறாக 8000 சத்துணவு மையங்களுக்கு மூடு விழா எடுக்க நினைக்கும் நிலை மாநில அ.தி.மு.க.வின் கையாலாகத்தனத்தையே காட்டுகிறது.

    தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை குறைக்கக் கூறி சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியதை செயல்படுத்தாமல், கூடுதலாக கடைகளை திறக்க முயலும் அ.தி.மு.க. அரசு ஏழை எளிய மாணவர்களின் பசியை போக்கும் சத்துணவு மையங்களுக்கு மூடுவிழா நடத்தும் போக்கு கண்டிக்கத்தது.

    ஒரே கல்வித் தகுதி உள்ள ஆசிரியர்களுக்கு இருவிதமாக ஊதியம் வழங்காமல் ஒரே ஊதியம் கோரி அமைதியான முறையில் போராட்டம் நடத்திவரும் ஆசிரியர்களின் பிரதிநிதிகளை தமிழக முதல்வர் அழைத்து பேசி சுமூக தீர்வு காண வேண்டும்.

    இதுபோல் சத்துணவு ஊழியர்களின் வாழ்வாதாரத்தினையும் மனதில் கொண்டு ஏழை எளிய கல்விப் பயிலும் மாணவர்களின் நிலைப்பாட்டினையும் கருத்தில் கொண்டு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு திருநாவுக்கரசர் கூறி உள்ளார். #Congress #Thirunavukkarasar #NutritionCenter
    தமிழகம் முழுவதும் இன்று நடைபெற இருந்த சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. #NutritionStaff
    சென்னை:

    சத்துணவு திட்டத்துக்கு மத்திய அரசு வழங்கி வந்த மானியத்தை 60 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக குறைத்தது. இதனால், தமிழக அரசுக்கு ஏற்பட்ட கூடுதல் செலவை சமாளிக்க 25 மாணவ-மாணவிகளுக்கு குறைவாக மதிய உணவு சாப்பிடும் 8 ஆயிரம் சத்துணவு மையங்களை மூடுவதற்கு அரசு திட்டமிட்டது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சத்துணவு ஊழியர்கள் இன்று  மாநிலம் முழுவதும் கலெக்டர் அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் செய்வதாக அறிவித்து இருந்தனர். இந்த நிலையில், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் நேற்று மாலை நடைபெற்றது.

    கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் ப.சுந்தரம்மாள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மத்திய அரசு சத்துணவு திட்டத்துக்கு வழங்கும் மானியத்தை குறைத்ததன் காரணமாக 25 குழந்தைகளுக்கு குறைவாக உள்ள சத்துணவு மையத்தை மூடிவிட்டு அந்த மையங்களுக்கு வரும் மாணவர்களுக்கு அருகில் உள்ள பள்ளி சத்துணவு மையங்களில் ஒரு உதவியாளரை மட்டும் வைத்துக் கொண்டு உணவு சமைத்து அந்த குழந்தைகளுக்கு வழங்க வேண்டும். மேலும், அங்கு பணிபுரிந்த அமைப்பாளர், சமையலர், உதவியாளர்கள் எங்கு காலியிடங்கள் உள்ளதோ அங்கு மாற்றம் செய்யப்படுவார்கள் என சமூகநல ஆணையர் உத்தரவிட்டு இருந்தார். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் 27.12.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.


    இந்த நிலையில், 25 குழந்தைகளுக்கு குறைவாக உள்ள சத்துணவு மையங்களை மூடுவது இல்லை. அதே மையத்தில் பணியாற்றி வரும் சமையலர் அல்லது உதவியாளர் மட்டும் தொடர்ந்து அங்கு பணியாற்றவும், அமைப்பாளர்கள் மட்டும் காலியாக உள்ள பணியிடங்களுக்கு கலந்தாய்வு மூலம் அவர்கள் விருப்பத்தை பெற்று பணிமாற்றம் செய்யப்படுவார்கள் எனவும், 2019 டிசம்பர் 31-ந் தேதி வரை வயது முதிர்வு காரணமாக ஓய்வு பெறும் சத்துணவு அமைப்பாளர்கள் அதே மையத்தில் பணிபுரிவார்கள் எனவும் சமூகநல ஆணையர் உத்தரவிட்டு உள்ளார். எனவே, இன்று நடைபெற இருந்த சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  #NutritionStaff
    தமிழகத்தில் 25-க்கும் குறைவான மாணவர்களுடன் செயல்பட்டு வரும் 8,000 சத்துணவு மையங்களை மூட அரசு முடிவு செய்துள்ளது. #TNGovt #NutritionCenters
    சென்னை:

    அரசு பள்ளிகளில் ஏழை மாணவர்களின் வருகையை ஊக்கப்படுத்தும் வகையில் காமராஜர் முதல்-அமைச்சராக இருந்தபோது மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார்.

    அதன் பிறகு எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்த போது அதை சத்துணவு திட்டமாக மாற்றியதுடன் 10-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கும் நீடித்தார். இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டதை தொடர்ந்து மற்ற மாநிலங்களும் சத்துணவு திட்டத்தை நிறைவேற்றி வருகின்றன. மத்திய அரசும் சத்துணவு திட்டத்துக்கு உதவி வருகிறது.

    தமிழ்நாட்டில் தற்போது 43,200 சத்துணவு மையங்கள் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் 50 லட்சம் ஏழை மாணவர்கள் பயன் அடைந்து வருகிறார்கள். இந்த நிலையில் பல சத்துணவு மையங்களில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வருவதாக புள்ளி விவரங்கள் வெளியாகி உள்ளது.

    ஒவ்வொரு சத்துணவு மையத்திலும் அமைப்பாளர், உதவியாளர் என 2 ஊழியர்கள் வீதம் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்களுக்கு மாதச் சம்பளம் ரூ.5,000 முதல் ரூ.7,000 வரை வழங்கப்படுகிறது. மாணவர்கள் வருகை குறைவதால் அரசுக்கு இழப்பு ஏற்படுகிறது.

    1000 குழந்தைகள் வரை பயிலும் பள்ளிகளில் உள்ள சத்துணவு மையங்களில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது.


    இதையடுத்து மாணவர்கள் குறைவாக வரும் மையங்கள் பற்றி அரசு கணக்கெடுத்து வருகிறது. இதில் 25-க்கும் குறைவான மாணவர்களுடன் 8,000 சத்துணவு மையங்கள் செயல்பட்டு வருவது தெரிய வந்தது. இதையடுத்து அந்த மையங்களை மூட அரசு முடிவு செய்துள்ளது.

    இந்த மையங்களுக்கு வழங்கப்படும் உணவு பொருட்கள் அருகில் உள்ள மையங்களுக்கு மாற்றப்படுகிறது. அந்த மையங்களில் இருந்து உணவு தயாரித்து மாணவர்கள் குறைவாக உள்ள மையங்களுக்கு தேவைக்கேற்ப அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    அரசின் இந்த முடிவுக்கு தமிழ்நாடு சத்துணவு திட்ட ஊழியர்கள் சங்க செயலாளர் ஆர்.நூர்ஜகான் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். அவர் கூறுகையில், “ஏற்கனவே தமிழ்நாடு முழுவதும் சத்துணவு மையங்களில் 10,000 உதவியாளர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளது. தற்போது அரசு எடுத்துள்ள முடிவால் சத்துணவு திட்டம் மேலும் பலவீனம் அடையும்” என்றார்.

    இதுபற்றி சமூக நலத்துறை ஆணையர் அமுதவல்லி கூறுகையில், “சத்துணவு மையங்களில் பணியிடங்களை ஒரே சீராக்கும் வகையில் 1992-ம் ஆண்டே அரசு இந்த முடிவு எடுத்தது. அது தான் படிப்படியாக அமல்படுத்தப்படுகிறது. நேரடியாக சத்துணவு மையங்கள் மூடப்படவில்லை” என்றார்.  #TNGovt #NutritionCenters
    ×